முதலிலேயே சொல்லி விடுகிறேன். இவை அழகான புகைப்படங்கள் அல்லவென்றாலும் மிக அழகான நொடிகள்.
மொட்டை மாடியில் பயிற்சி செய்வதில் பல அனுகூலங்கள் இருந்தாலும், இந்த இயற்கை சில வேளைகளில் அபாரமாக மனதை திசைத் திருப்பி விடுகிறது.
இன்று காலை தாய்ச்சி பயிற்சி முடித்து கீழே இறங்கத் தயாரான நொடியில் இந்த காட்சி கண்ணையும் கவனத்தையும் கவர்ந்தது. மரம் பாதி சூரியனை கபளீகரம் செய்தாற் போலிருந்தது…
புகைப்படம் எடுத்த பின் சற்று நகர்ந்து பார்த்த போதுதான் தெரிந்தது, பாதி சூரியனை மறைத்தது மரம் அல்ல என்று…
மெல்ல சூரியன் கட்டடத்தில் ஏறத் தொடங்கியது…
இன்னும் மேலே…
கட்டடத்தில் உட்கார்ந்தாகி விட்டது…
இன்னும் உயரே, மேகத்தின் பின்னால்…
மேகத்தினுள் சென்று கண் பார்வையிலிருந்து மறைந்தது; ஆனால், அதன் வெளிச்சம் சுற்றிலும்.
நிச்சயமாக இன்றைய காலை வானம் இதற்கு முன்பு ஒரு முறை நான் புகைப்படம் எடுத்த காட்சியைப் போல் காட்சியளிக்கவில்லை (கீழே பார்க்கவும்).
ஆனால், இது வேறு நாள்..வேறு அழகு. வாழ்வில் எதையும் ஒப்பிட்டு மதிப்பிடாமல் அந்த நொடியை / நிகழ்வை / மனிதர்களை அங்கீகரிப்பது மனதுக்கு புத்துணர்ச்சி தருவதுடன் நம் மனநிலையை, வாழ்க்கை பற்றிய அணுகுமுறையைப் பல படிகள் மேலே ஏற்றி விடுகிறது.